• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடா ஆசையால் ஏமாற்றப்படும் இலங்கை தமிழ் இளைஞர்கள்

Feb 28, 2022

 கனடாவுக்கு வேலை வாய்ப்பு, கல்வி, மற்றும் சுற்றுலா விசாவில் செல்ல முடியுமெனக் கூறிய கும்பல் ஒன்றிடம் தமிழ் இளைஞர்கள் பலர் ஏமாந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள கனடா விசாவுக்கு விண்ணப்பிக்கும் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனத்திற்கு (Accredited Private Company) நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைக் கையளித்த பின்னரே இந்த ஏமாற்று வேலை இடம்பெறுகின்றதாகவும் கூறப்படுகின்றது.

இந்த ஏமாற்று நடவடிக்கைகளில் கனடா விசாவுக்கு விண்ணப்பிக்கும் அங்கீகாரம் பெற்ற குறித்த தனியார் நிறுவன உயர் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பிருப்பதாகவும் பாதிக்கப்படட இளைஞர்கள் சந்தேகிக்கின்றனர்.

கனடாவுக்குச் செல்வதானால் குறைந்தது இலங்கை ரூபாவில் அறுபது அல்லது அறுபத்து ஐந்து இலட்சம் ருபா வரை பணம் செலுத்த வேண்டும். ஆனால் மேற்படி விசாவில் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறுகின்ற கும்பல் முற்பணமாகப் பத்து இலட்சம் ரூபாவை மாத்திரமே பெற்றுக் கொள்கின்றது.

வேறு சிலரிடம் இரண்டு இலட்சம் ரூபாவையும், இன்னும் சிலரிடம் பத்து இலட்சம் ரூபா முற்பணத்தையும் பெற்று, விசா வந்த பின்னர் மேலதிகமாக ஐந்து இலட்சம் வரையும் அக் கும்பல் பெறுகின்றது.

மிகுதிப் பணத்தைக் கனடா போய்ச் சேர்ந்ததும் வழங்க முடியுமெனக் கூறுவதால் பல தமிழ் இளைஞர்கள் அவர்களை நம்பி ஏமாந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கனடாவுக்கோ அல்லது வேறு எந்த மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கோ செல்வதானால், கொழும்பில் உள்ள அந்த நாட்டுத் தூதரங்களினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் நடத்தும் முகவர் அலுவலகங்களிலேயே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கனடா விசாவைப் பெறுவதானால் முதலில் இயங்கலை (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் விண்ணப்பித்தவரின் மின் அஞ்சலில் வரும் பதிலின் அடிப்படையில் நேரடியாகச் சென்று ஆவணங்களைக் கையளிக்க வேண்டும்.

ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது அங்குள்ள உள்ளுர் அதிகாரிகள் பரிசோதிப்பர். அதாவது விண்ணப்பப் படிவத்தில் பெயர் விபரங்கள், முகவரிகள், மற்றும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் மற்றும் ஆவணங்கள் எல்லாமே சரியாக இருக்கின்றதா என்பதை மாத்திரமே அந்த அதிகாரிகள் உறுதிப்படுத்திப் பெற்றுக் கொள்வர்.

அதோடு அதே அலுவலகத்திலேயே மற்றுமொரு அதிகாரியிடம் சென்று தமது கண் மற்றும் விரல் அடையாளங்களை இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறை சாதாரணமாக விண்ணப்பிக்கும் எல்லோருக்கும் உரிய ஒன்று. அவ்வாறு நேரடியாகச் சென்று விண்ணப்பித்த பின்னர் மின் அஞ்சல் மூலம் பெறப்படும் மற்றுமொரு பதிலின் அடிப்படையிலேயே விண்ணப்பித்த நபர் தனது கடவுச்சீட்டை குறித்த அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஓப்படைக்கப்பட்ட பின்னர் பற்றுச் சீட்டு ஒன்று வழங்கப்படும்.

(விண்ணப்பப்படிவம் நிராகரிக்கப்பட்டால் மின் அஞ்சல் மூலம் தகவல் வரும். அப்படியானால் கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமே இல்லை. இதுதான் நிறுவனத்தின் உண்மையான நடவடிக்கை) இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கடவுச்சீட்டை வந்து பெற்றுக்கொள்ளுமாறு கையடக்கத் தொலைபேசிக்குக் குறுந்தகவல் அல்லது மின் அஞ்சலில் தகவல் பின்னரே குறித்த அலுவலகத்துக்குச் சென்று கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அப்போதுதான் உண்மை விசா (Original visa) வந்துள்ளது என்பதை அறிய முடியும். கடவுச்சீட்டை ஒப்படைத்துவிட்டால் விசா 90 சதவீதம் உறுதியாகிவிடும். ஆனால் இங்கே ஏமாற்றப்படும் இளைஞர்களுக்கு அது புரிவதில்லை. இந்த இடத்திலேதான் விசா பெற்றுத்தருவதாகக் கூறுகின்ற கும்பல் தமது கைவரிசையைக் காண்பிக்கின்றது.

‚நீங்கள் முழுப் பணத்தையும் தரவேண்டாம் விண்ணப்பத்தை நாங்களே நிரப்பியும் தருகின்றோம். நீங்கள் நேரடியாகச் சென்று விண்ணப்பங்களையும் உரிய ஆவணங்களையும் மற்றும் கடவுச்சீட்டையும் கையளித்து விட்டு அங்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டை எங்களிடம் தாருங்கள்‘ என்று கூறுகின்றது அந்தக் கும்பல்.

விசாவுடன் கடவுச்சீட்டை வழங்கும்போது முற்பணமாகக் கொடுத்த பத்து இலட்சம் ரூபாவுக்கு மேலதிகமாக இரண்டு இலட்சம் ரூபாவை மாத்திரம் தந்தால்போதும், கனடவுக்குப் போய்ச் சேர்ந்த பின்னர் மிகுதிப் பணத்தை அனுப்புங்கள் என்றும் நம்பிக்கையாகக் கூறுகின்றது அந்தக் கும்பல். வேறு சிலரிடம் அந்தப் போலி விசாவைக் கையளித்துவிட்டு முற்பணத்துக்கு மேலதிகமாக ஐந்து இலட்சம் ரூபா வரையும் பெறப்பட்டிருக்கின்றதாகவும் கூறப்படுகின்றது.

விண்ணப்பித்த பின்னர் வழங்கப்படும் பற்றுச் சீட்டைக் காண்பித்து எவரும் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என்ற அடிப்படையில், குறித்த பற்றுச்சீட்டைப் பெற்று குறுந்தகவல் அல்லது மின் அஞ்சல் வந்த பின்னர், அந்தக் கும்பல், கனடா விசா வழங்கும் தனியார் நிறுவனத்திற்குச் சென்று கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்கின்றது.

நிச்சயமாக விசா நிராகரிக்கப்பட்டிருக்கும் என அந்தக் கும்பலுக்குத் தெரியும். ஆனால் கடவுச்சீட்டில் நிராகரிப்பு எனப் பதிவு செய்யப்படாமல் தாழ் ஒன்றில் நிராகரிப்புக்கான இலக்கம் வழங்கப்பட்டிருக்கும். கனடாவுக்குச் செல்வதற்குரிய நம்பர் 2 (Number 2 Visa) எனக் கூறப்படும் போலி விசா ஒன்றை உண்மை விசா (Original visa) போன்று பதிவு செய்து கடவுச் சீட்டை இளைஞர்களிடம் குறித்த கும்பல் வழங்கும்போது, இளைஞர்களுக்கு நம்பிக்கை பிறக்கின்றது.

ஏனெனில் விண்ணப்பித்த பின்னர் ஆவணங்களுடன் கடவுச்சீட்டையும் நேரில் கொண்டுபோய் கொடுத்துக் கண் மற்றும் விரல் அடையாளங்களும் பெறப்பட்டதுதானே என்ற பலமான நம்பிக்கை ஏமாற்றப்படும் இளைஞர்களுக்கு வருகின்றது. இது போலி விசாவாக இருக்குமோ என்று சிறு துளி சந்தேகம் ஏற்பட வாய்ப்பில்லை.

அதனால் Number 2 Visa எனப்படும் போலியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள விசாவைத் தமது கடவுச்சிட்டில் கண்டதுமே, இளைஞர்கள் அறிவிழந்து இரண்டு இலட்சம் ரூபா பணத்தை அல்லது அதற்கும் மேலதிகமான பணத்தை உடனடியாகக் குறித்த கும்பலின் கைகளில் நேரடியாகவே வழங்கியுள்ளனர். வேறு சில இளைஞர்களுக்கு விண்ணப்பத்தின் அடிப்படையில் துரதிஷ்டவசமாக உண்மை விசா (Original visa) கிடைத்துக் கனடாவுக்குச் சென்றுமிருக்கின்றனர்.

அவ்வாறு சென்ற இளைஞர்களிடம் குறித்த கும்பல், ஏற்கனவே நிர்ணயித்த பணத் தொகைக்கு அதிகமாகவே (Planned fixed payment) பலாத்காரமாகப் பெற்றதாகவும் அறிய முடிகின்றது.

ஆகவே முன் பின் தெரியாத கும்பலிடம் எப்படி நேரடியாகப் பணத்தைக் கொடுக்க முடியும்? வங்கிக் கணக்கு ஒன்றில் பணம் செலுத்தும் முறையிருந்தால், நிச்சயமாகப் பொலிஸாரிடம் முறையிட்டுச் சம்மந்தப்பட்ட நபரைக் கைது செய்யலாம், அல்லது ஏதுவும் நடவடிக்கை எடுக்கலாமல்லவா? அத்துடன் கனடாவுக்கு விசா வழங்கும் குறித்த நிறுவனத்துக்கு நேரடியாகச் சென்று ஆவணங்களையும், கடவுச்சீட்டையும் கையளிக்க முடியுமென்றால், இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வருகின்றன குறுந்தகவலின் பின்னர் விசா வழங்கப்பட்ட கடவுச்சீட்டை ஏன் நேரில் சென்று பெற முடியாது? எந்த நம்பிக்கையோடு கடவுச்சீட்டை மீளப் பெறும் பற்றுச்சீட்டை முன்பின்தெரியாத அந்தக் கும்பலிடம் கையளிக்க முடியும்? இதுபற்றியெல்லாம் சிந்திக்காமல், எப்படியாகிலும் கனடாவுக்கு, அதுவும் குறைந்த செலவில் என்று ஆசைப்பட்டுப் புத்தி பேதலிக்கும் நிலைக்கு ஏன் இளைஞர்கள் செல்ல வேண்டும்? என பாதிக்கப்பட்டவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

தூதரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றுதான் விசா வழங்குவதற்குரிய விண்ணப்பப் படிவங்களைச் சரிபார்த்துப் பெறுகின்றதே தவிர, கொழும்பில் உள்ள கனடா தூதரகம் அல்ல. இதனைக்கூடப் புரியாமல் கனடா தூதரகத்தில் விண்ணப்பித்தாகப் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அப்பாவித்தனமாகத் தனது முறைப்பாட்டில் கூறியிருக்கிறார் என்பதுதான் வேடிக்கை.

கொழும்பில் உள்ள கனடா விசா வழங்கும் தனியார் நிறுவன உயர் அதிகாரிகள் சிலரின் நடத்தையை அவதானித்தே மோசடி கும்பலுடன் அவர்களுக்கு தொடர்பிருப்பதாக பாதிக்கப்பட்ட சில இளைஞர்கள் சந்தேகிக்கின்றனர்.

குறிப்பாக கடவுச்சீட்டை ஒப்படைக்கவும் என்று அனுப்பப்படும் மின் அஞ்சலில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பலுக்குப் பின்னால் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் மாத்திரமல்ல, அரசியல் செல்வாக்கும் இருப்பதாகப் பாதிக்கப்பட்ட சில இளைஞர்கள் கூறுகின்றனர்.

கொழும்பில் உள்ள கனடா தூதரகம் குறித்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேவேளை கொள்ளை கும்பலிடம் வடக்குக் கிழக்குத் தமிழ் இளைஞர்களே கூடுதலாக ஏமாற்றமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கனடாவில் வாழும் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்களும் இந்தக் கும்பல்களின் ஏமாற்று வேலைகளை அறியாமல், நேரடியாகவே அவர்களின் கைகளுக்கு முற்பணமாக பத்து இலட்சம் ரூபாவை அனுப்புகின்றனர் என்பதுதான் வேதனைக்குரிய விடயம். எனவே இவ்வாறான கொள்ளைக்கும்பலிடம் தாங்கள் ஏமாந்தது போல மற்றவர்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed