• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்.

Mai 12, 2022

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுர வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட குழப்பத்தினை அடுத்து காவல்துறையினரின் தலையீட்டுடன் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாது, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதியம் முதல் பெற்றோல் முடிவடைந்து விட்டதாக ஊழியர்கள் கூறிய போதிலும் ஒரு சிலருக்கு வழங்கப்பட்டது.

அதனால் , அங்கு கூடிய சில தமக்கும் பெற்றோல் தருமாறு கோரிய போது, யாழ்.போதனா வைத்திசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் , தாதியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாத்திரமே வழங்குகின்றோம் எனக் கூறியுள்ளனர்.

அதன் போது, அங்கு நின்று இருந்த சிலர், ஒரு வைத்திய சாலை ஊழியர் ஐந்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்து பெற்றோல் அடித்து செல்வதனை எவ்வாறு எம்மால் அனுமதிக்க முடியும் எனக் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு இரு மோட்டார் சைக்கிளில் வந்த காவல்துறையினர் தமக்கு பெற்றோல் நிரப்ப ஊழியர்களிடம் கேட்ட போது , அவர்களுக்கு பெற்றோல் வழங்க ஊழியர்கள் தயாராகிய போது , மணித்தியால கணக்காக காத்திருக்கும் எமக்கு பெற்றோல் இல்லை எனக் கூறிய நீங்கள் , காவல்துறையினருக்கு பெற்றோல் வழங்க எங்கிருந்து பெற்றோல் வந்தது ? அவர்களுக்கு பெற்றோல் அடித்தால் எமக்கும் அடிக்க வேண்டும் என கோரினார்கள்.

அதன் போது , இரு காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்ற போதிலும் , ஒரு காவல்துறை உத்தியோகஸ்தர் தனக்கு பெற்றோல் அடிக்க வேண்டும் என ஊழியர்களிடம் கண்டிப்பான குரலில் கூறினார்.

அங்கிருந்தவர்களின் குழப்ப நிலைமை காரணமாக ஊழியர்கள் அதற்கு தயங்கிய போது , குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் “ எனக்கு அடிக்க முடியாத பெற்றோல் இங்கே யாருக்கும் அடிக்க கூடாது“ என கோபத்துடன் கூறி அங்கிருந்து சென்றார். 

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed