• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

காற்றின் வேகம் அதிகரிக்கும் : வளிமண்டலவியல் திணைக்களம்!

Jun 1, 2022

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்றும் அடுத்த சில நாட்களிலும் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-45 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

இன்றைய தினமும் நாட்டின் பல பாகங்களிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனர்த்தங்களால் இன்றைய தினம் தங்களது பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியாத பரீட்சார்த்திகள், அருகிலுள்ள பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகள், தங்களது பரீட்சை மையத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுமாயின், அனர்த்த முகாமைத்துவ மையத்தின் 117 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி தமது பிரச்சினையை அறியப்படுத்த வேண்டும்.

இதையடுத்து, பரீட்சை பணிக்குழாமினர், கல்வி அதிகாரிளுடன் இணைந்து, புதிய இடத்தில் அவர்களை பரீட்சைக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள்.

இதன்போது, பரீட்சார்த்திகளுக்கு உரிய காலம் வழங்கப்படும்.

அருகிலுள்ள பரீட்சை மையங்களுக்கு சென்றால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்பதை எவரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்.

எனவே, தங்களின் பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களின் பெற்றோர்கள் குறித்த இடத்திலிருந்து 117 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்க வேண்டும்.

இதையடுத்து, குறித்த மாணவர்களை புதிய பரீட்சை மையத்திற்கு அனுப்ப தாங்கள் நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பரீட்சார்த்திகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின், பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்துக்கு தொடர்புகொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed