ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பாக முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளவர்களை அவமதிக்கும் நோக்கில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகப் பதிவில், ‚நியூயோர்க் டைம்ஸ்‘ மற்றும் ‚சிஎன்என்‘ ஆகிய ஊடகங்கள் ஈரான் பேச்சுவார்த்தை குறித்து வெளியிட்டுள்ள ‚பத்து அம்சத் திட்டம்‘ என்பது ஒரு திட்டமிடப்பட்ட மோசடி எனச் சாடியுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளவர்களைக் களங்கப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறான போலியான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அந்தப் பத்து அம்சங்களும் முற்றிலும் புனையப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறான செய்திகளை வெளியிடும் ஊடகங்களை „தீய தோல்வியாளர்கள்“ என விமர்சித்துள்ள அவர், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்குவோம் (Make America Great Again) எனும் தனது நிலைப்பாட்டையும் அந்தப் பதிவில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
