வட இந்தியாவில் மழை தொடர்பான சம்பவங்களில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
டெல்லி என்.சி.ஆர் பகுதியில் இன்று (2) அதிகாலை புழுதிப் புயலுடன் மூன்று மணி நேரத்தில் 77 மி. மீ அளவு கன மழை பெய்துள்ளது.
இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று காரணமாக டெல்லி விமான நிலையத்தில் மூன்று விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
இதேவேளை 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. மேலும் பல்வேறு பகுதிகளில் மரங்களும் வேரோடு சாய்ந்தன. நஜாஃப்கரில் வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெண் பலியாகினர்.
இதுகுறித்து டெல்லி தீயணைப்பு அதிகாரி கூறுகையில், நான்கு பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர்.
உடேன அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்றார்.
இதனிடையே நகரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மக்கள் மிகவும் விழிப்புடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளது.
அதேசமயம் உத்தரப் பிரதேசத்தின் பெரும்பகுதிகளில் இன்று காலை மின்னல் தாக்கியதில் குறைந்தது மூன்று பேர் பலியாகியுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.