யாழ்ப்பாணம் – சாவகச்சேரியைச் சேர்ந்த ஜெயகரன் மற்றும் டெனீகா தம்பதியரின் மகளான 3 வயதுக் குழந்தை தஸ்விகா 1500 தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களை குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனை படைத்துள்ளதோடு, மழலை மொழி வித்தகர் என்ற பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த நிகழ்வானது சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் மற்றும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபல்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இணைந்து, சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்களான இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, யாழ் மாவட்டத் தலைவர் துரை பிரனவச் செல்வன் மற்றும் கிளிநொச்சி மாவட்டத் தலைவர் ராசதுரை ஜெயசுதர்சன் போன்றோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதன்போது குழந்தையின் முயற்சியை உன்னிப்பாக கண்காணித்த நடுவர்கள், அதை உலக சாதனையாகப் பதிவு செய்தார்கள்.
இதனையடுத்து தஸ்விகாவிற்கு சான்றிதழ், நினைவுக் கேடயம், அடையாள அட்டை, தங்கப்பதக்கம் போன்றவை வழங்கப்பட்டதோடு,
இச் சிறிய வயதில் அவர் கொண்டிருந்த மொழிபெயர்ப்புத் திறனை ஊக்கப்படுத்தும் விதமாக, சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் சார்பாக மழலை மொழி வித்தகர் என்ற பட்டமும் அவருக்குச் சூட்டப்பட்டது
இதேவேளை யாழ் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்பு கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி ச.க.கண்ணதாசன் மற்றும் தென்மராட்சிக் கல்வி வலையத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.அபிராமி ஆகியோர் சோழன் உலக சாதனை படைத்த மாணவியை வாழ்த்திப் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.