கொழும்பில் பலத்த காற்று உட்பட சீரற்ற வானிலை காரணமாக பல வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன. பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று (30) மாலை பெய்த கடும் மழை மற்றும் அதனுடன் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக, பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் சொத்து சேதங்களும் பதிவாகியுள்ளன.
கொழும்பு விஜயராம மாவத்தை, கொழும்பு ஹோர்ட்டன் பிரதேசம், மெட்லண்ட் பிரதேசம், கொழும்பு 02 நவம் மாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததன் காரணமாக, அந்த வீதிகளை அண்மித்த பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் 245 குடும்பங்களைச் சேர்ந்த 1,321 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் 239 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன