• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

‘காதல் மலர்’ மூலிகைக்காக இந்தியாவுக்குள் நுழையும் சீன வீரர்கள்!

Dez 29, 2022

இமயமலை பகுதிகளில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் அடி உயரத்தில் கார்டிசெப்ஸ் பங்கஸ் என்ற பெயரிலான அரிய வகை மூலிகைகள் வளர்ந்து காணப்படுகின்றன.

தென்மேற்கு சீனாவிலும் இவை உள்ளன. இமயமலையின் தங்கம் என அழைக்கப்படும் இந்த அரிய மூலிகை விலைமதிப்பற்றது. தங்கத்தின் மதிப்பை விட விலை அதிகம் கொண்டது. இந்த மூலிகை பட்டாம்பூச்சியின் கூட்டுப்புழு போன்ற தோற்றம் கொண்ட நிலையில், ஆங்கிலத்தில் இதனை கேட்டர்பில்லர் பங்கஸ் என்றும் அழைக்கின்றனர்.

சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.17 லட்சம் விலை மதிப்பு கொண்டது. சர்வதேச அளவில் 2022-ம் ஆண்டில் ரூ.8,859.81 லட்சம் கோடி அளவுக்கு சந்தையில் இந்த மூலிகை விலை போயுள்ளது. சீனாவில் இதற்கு தேவை அதிகரித்து உள்ளது.

இதனை அதிகளவில் உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் இதன் விளைச்சல் குறைந்து, பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

இதனால், இந்த மூலிகையை தேடி, அருணாசல பிரதேசத்தில் சட்டவிரோத ஊடுருவலில் சீன வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனை இந்தோ-பசிபிக் உயர்மட்ட தொலைதொடர்பு மையம் தெரிவித்து உள்ளது.

சீனாவின் குவாங்சோ மற்றும் ஹாங்காங் மூலிகை மருந்துக்கான உலகின் மிகப்பெரிய சந்தைகளாகக் கூறப்படுகிறது. சீன மூலிகை நிறுவனங்கள் சமீப ஆண்டுகளாக உள்ளூர்வாசிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து மொத்த மலை பகுதியையும் இந்த மூலிகையை அறுவடை செய்வதற்காக ஆக்கிரமித்து உள்ளது.

இந்நிலையிலேயே, சீனாவை ஒட்டிய இமயமலை பகுதியில் விளையும் தங்கத்தின் மதிப்பை விட அதிக விலையுயர்ந்த இந்த மூலிகையை தேடி சீன வீரர்கள் பல்வேறு முறை ஊடுருவ முயன்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

கார்டிசெப்ஸ் என்றால் என்ன? கார்டிசெப்ஸ் சினென்சிஸ் அல்லது ஓபியோகார்டிசெப்ஸ் சினென்சிஸ் என்பது கம்பளிப்பூச்சிகளைப் பாதிக்கும் ஒரு வகை பூஞ்சையாகும்.

இது ஒரு விலங்கு மற்றும் ஒரு தாவரத்தின் கலவையாகும். மூலிகை மருந்துகளின் உற்பத்தியில் இந்த பூஞ்சை பயன்படுத்தப்படுகிறது. கார்டிசெப்ஸ் அதன் பாலுணர்வூட்டும் பண்புகளுக்காக இமாலயன் வயாகரா அல்லது ‘காதல் மலர்’ என்றும் செல்லப்பெயர் பெற்றது.

சிறுநீரக நோய் முதல் சோர்வு வரை அனைத்தையும் குணப்படுத்த நடுத்தர வர்க்க சீனர்களிடையே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, இருப்பினும் அறிவியல் சான்றுகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்குப் பல பெயர்கள் உண்டு; இந்தியாவில், இது கீடா ஜாடி (பூச்சி மூலிகை), நேபாளத்தில் இது யார்சா கும்பா, திபெத்தில் இது யார்ட்சா கன்பு மற்றும் சீனாவில் இது டோங் சிங் சியா காவ் என்று அழைக்கப்படுகிறது.

கார்டிசெப்ஸ் விற்பனை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கார்டிசெப்ஸ் பல்வேறு வழிகள் மூலம் சீனாவிற்கு கடத்தப்படுகிறது. நேபாள எல்லையில் உள்ள உத்தரகாண்ட் மாநிலம் தார்ச்சுலா, சட்டவிரோதமாக பூஞ்சை கடத்தலுக்கு பெயர் பெற்றது.

தார்ச்சுலாவில் இருந்து கார்டிசெப்ஸ் அடிக்கடி நேபாளம் வழியாக சீனாவிற்கு செல்கிறது. அங்கு, ஒரு துண்டு கார்டிசெப்ஸ் சுமார் 20 யுவான் அல்லது 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சோதனை-குழாய் ஆய்வுகளில், நுரையீரல், பெருங்குடல், தோல் மற்றும் கல்லீரல் புற்றுநோய்கள் உட்பட பல வகையான மனித புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கார்டிசெப்ஸ் தடுப்பதாகக் கூறப்படுகிறது.

கார்டிசெப்ஸ் புற்றுநோய் சிகிச்சையின் பல வடிவங்களுடன் தொடர்புடைய பக்க விளைவுகளையும் மாற்றியமைக்கலாம். இந்த பக்க விளைவுகளில் ஒன்று லுகோபீனியா.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed