• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் லிஸ் ட்ரஸ்

Sep 5, 2022

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தற்போதைய வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைமைத்துவத்துக்காக தன்னுடன் போட்டியிட்ட முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை தோற்கடித்து அவர் வெற்றிபெற்றுள்ளார்.

இது தொடர்பிலான அறிவிப்பு சற்றுமுன் வெளிவந்துள்ளது. இதன்மூலம் பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமராக அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் ஆளும்கட்சியில் கடந்த ஏழு வாரகாலமாக இடம்பெற்ற இந்தத் தலைமைத்துப் போட்டியின் முடிவை வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள ஒரு மாநாட்டு மையத்தில் வைத்து கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் சேர் கிறகம் பிராடி அறிவித்தபோது லிஸ் ட்ரஸின் ஆதரவாளர்கள் கரவொலியை எழுப்பி ஆரவாரம் செய்திருந்தனர்.

கென்சவேர்ட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அளித்த 82.6 வீத வாக்குப்பதிவில் கிட்டிய வாக்குகளில் லிஸ் ட்ரசுக்கு 81,326 வாக்குகள் கிட்டியிருந்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரிஷி சுனக்கிற்கு 60,399 வாக்குகள் கிட்டியிருந்தன.

இந்த அறிவிப்பின் பின்னர் கென்சவேட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொண்ட வெற்றியாளரான லிஸ் ட்ரஸ் தனது உரையை வழங்கிய போது பிரித்தானியாவில் உயரும் எரிசக்தி செலவுகளை சமாளிக்க ஒரு திட்டத்தை அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் தற்போதைய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நாளை ராணி எலிசபெத்தை ஸ்கொட்லாந்தில் உள்ள பல்மோரல் கோட்டையில் சந்தித்து தனது பதவிவிலகல் கடிதத்தை வழங்குவார்

அதன் பின்னர் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ், ராணியின் நியமனத்திற்குப் பின்னர் பிரதமாராக பதவியேற்பார்.

முதலாம் இணைப்பு 

பிரித்தானியாவின் பிரதமர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற அறிவிப்பு இன்று திங்கட்கிழமை இலங்கை நேரப்படி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் 8 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் தற்போது, லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக உள்ளனர்.

இவர்களில் வெற்றி பெறப்போவது யார் என்ற இறுதிக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இந்திய வம்சாவளி பிரதமர் வேட்பாளரான ரிஷி சுனக் பின்னடைவை சந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பலகட்டங்களாக நடைபெற்ற வாக்கெடுப்பில், ரிஷி சுனக்கே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள், அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக வாக்களித்தனர். இந்த வாக்குப்பதிவு நிலவரப்படி, பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் லிஸ் ட்ரஸ்க்குத் தான் அதிகமானோர் வாக்ளித்திருப்பதாகவும், இதனால் இந்திய வம்சாவளி பிரதமர் வேட்பாளரான ரிஷி சுனக் பின்னடைவைச் சந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கொரோனா காலத்தில் பிறந்தநாள் கொண்டாடியது, பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நபரை அரசின் கொறடாவாக்கியது, பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறியது போன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளால் சொந்தக் கட்சிக்குள்ளேயே பொரிஸ் ஜோன்சனுக்கு எதிர்ப்பு எழுந்தது.

நெருக்கடிக்குள்ளான பொரிஸ் ஜோன்சன்

அதனையடுத்து ரிஷி சுனக் உள்ளிட்ட கன்சர்வேடிவ் கட்சியின் அமைச்சர்கள் தொடர்ச்சியாக இராஜினாமா செய்யத் தொடங்கினர். இதனால் பொரிஸ் ஜோன்சன் பாரிய நெருக்கடிக்குள்ளானார்.

இதன் காரணமாக வேறுவழியின்றி தனது பிரதமர் பதவியை கடந்த ஜூலை 7 ஆம் திகதி, பொரிஸ் ஜோன்சன் இராஜினாமா செய்தார். 

அதனையடுத்து பிரிட்டனுக்கு புதிய பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் இறுதியில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முன்னிலையில் உள்ள லிஸ் டிரஸ்

அதையடுத்து, அடுத்த பிரதமர் யார் என்பதில் இருவருக்கும் இடையே நேரடிப் போட்டி உருவானது. பரஸ்பரம் இருவருமே தேர்தல் பிரசாரத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர்.

இருப்பினும் தற்போதைய நிலவரப்படி, ரிஷி சுனக்கின் பின்டைவை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னடைவுக்கான பின்னணியில் முன்னாள் பிரதமரும், தற்போதைய காபந்து பிரதமராகவும் இருக்கும் பொரிஸ் ஜோன்சனின் சதித்திட்டம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அதாவது, பொரிஸ் ஜோன்சன் தனது பிரதமர் பதவியை இழக்க, நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக்தான் காரணம் என்றும், ஆகவே தேர்தலில் ரிஷி சுனக்கை ஆதரிக்க வேண்டாம் என கன்சர்வேடிவ் கட்சியினரை அவர் இரகசியமாகக் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed