• Sa. Mai 4th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியாவில் துப்பாக்கி சூடு! பறிபோன இரு உயிர்கள்

Mai 13, 2023

வவுனியா நீலியாமோட்டை பகுதியில் சூட்டுக்காயங்களுடன் பெண்  உட்பட இருவரது சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நீலியாமோட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் வெளியில் சென்றுவிட்டு இன்று அதிகாலை தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது வீட்டின் அறையில் உறங்கி கொண்டிருந்த தனது மனைவி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பெண் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிசார் அதனுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்வதற்கான நவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

எனினும் தேடப்பட்ட இளைஞர் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு முன்பாக சூட்டுக்காயத்துடன் சடலமாக கிடந்தமை பின்னர் கண்டறியப்பட்டது. அவரது சடலத்துடன் இடியன் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டது.

சம்பவத்தில் நியூட்டன் தர்சினி (வயது 26) என்ற ஒருபிள்ளையின் தாயும், சிவபாலன் சுஜாந்தன் வயது 24 என்ற இளைஞருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணை உயிரிழந்த இளைஞர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்ததுடன், அந்த பெண் திருமணம் முடித்த பின்னரும் குறித்த இனைஞர் தொடர்ச்சியான தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே உயிரிழந்த இளைஞன் இடியன் துப்பாக்கி மூலம் அந்தபெண்ணை கொலை செய்ததுடன், தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலங்களை பார்வையிட்ட நீதவான் அதனை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிசாரை பணித்திருந்தார். சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை பறயனாளங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed