• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

லண்டனில் மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட இந்திய வம்சாவளி பெண்!

Apr 9, 2022

லண்டனிலுள்ள வீடு ஒன்றில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி இளம் பெண் ஒருவரும் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இவர்களின் மரணம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த இந்திய வம்சாவளியினர் என்றும் பெயர் ஷிவாங்கி (Shiwangi Bagoan (25) என்றும், குழந்தை அவரது மகள் என்றும், சிறுமியின் பெயர் Ziana Bagoan (2) என்றும் தெரியவந்தது.

மேற்கு லண்டனிலுள்ள, Hounslow என்ற பகுதியில் அமைந்திருக்கும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அந்தப் பெண்ணும் அவரது மகளும் தங்கியிருந்த நிலையில், ஷிவாங்கியின் தாயாகிய Jassumatu, தன் மகளிடமிருந்து பல நாட்களாக அழைப்பு எதுவும் வராததால் அவரைத் தேடிச் சென்ற நிலையில்,அவரது மகளும்,குழந்தையும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இதன்போது, அவர்களது கைகளில் குளூக்கோஸ் ஏற்ற பயன்படுத்தும் ஊசி பொருத்தப்பட்டிருந்திருக்கிறது. அவர்களுக்கு அருகில் ஷிவாங்கி தன் தாய்க்கு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்த கடிதத்தில், அன்புள்ள அம்மா, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு நிறைய கஷ்டம் கொடுத்துவிட்டேன், என் மகளையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன், அவளை சுயநலமாக உங்களுடன் விட்டுவிட்டுச் செல்ல எனக்கு விருப்பமில்லை.எங்களுக்கு நீங்கள் நிறைய உதவிகள் செய்திருக்கிறீர்கள், பதிலுக்கு நான் உங்களுக்கு மன அழுத்தத்தைத்தான் கொடுத்திருக்கிறேன் என எழுதப்பட்டிருந்தது.

அந்த மரணங்கள் குறித்து நீதிமன்ற அதிகாரி ஒருவர் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில்,நேற்று விசாரணை அதிகாரி தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில்,  ஷிவாங்கி செவிலியராக மருத்துவமனை ஒன்றில் மயக்க மருந்து நிபுணர் ஒருவரின் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.அதில், ஷிவாங்கி பணியில் செய்த தவறு காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும், பின்னர் மீண்டும் 2020 ஜூலையில் பணிக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 11ஆம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் மருத்துவமனைக்குச் சென்ற ஷிவாங்கி, மீண்டும் 4.20க்கு வீடு திரும்பியுள்ளார். அந்த காட்சிகள் சி.சி.ரி.வி கமெராவில் பதிவாகியுள்ளன.

அவர் மருத்துவமனைக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் மருந்து ஒன்றை எடுத்து வந்ததாக கருதப்படுகிறது. வீடு திரும்பிய ஷிவாங்கி, தான் மருத்துவமனையிலிருந்து எடுத்து வந்த அந்த மருந்தை தன் மகளுக்குச் செலுத்திவிட்டு, தானும் அதே மருந்தைச் செலுத்திக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

எனவே, ஷிவாங்கி மருத்துவமனையிலிருந்து அலுவலர்களுக்குத் தெரியாமல் மருந்து ஒன்றை எடுத்து வந்து, அதை ஊசி மூலம் செலுத்தி தன் மகளை சட்ட விரோதமாகக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதாக நீதிமன்ற விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ஷிவாங்கி 2017ஆம் ஆண்டு மருந்து ஒன்றை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். தற்போது அவர் தன்னையும் தன் மகளையும் கொல்ல பயன்படுத்திய அதே மருந்தை அப்போது திருடியதற்காகத்தான் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed