• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்:

Jan 30, 2024

கடந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு சட்டப்படி புலம்பெயர்ந்தவர்கள் 300,000 பேர். ஆனால், இந்த ஆண்டு அத்தனை பேர் பிரித்தானியாவுக்கு வருவது சாத்தியமில்லை.

பிரித்தானியாவின் சட்டப்பூர்வ புலம்பெயர்தல் அமைப்பை மாற்றியமைத்தல், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் அளவுக்குமீறிய புலம்பெயர்தலைக் குறைத்தல் தொடர்பான நடவடிக்கைகள், இன்னும் சில வாரங்களுக்குள் அமுலுக்கு வரும் என பிரித்தானிய உள்துறைச் செயலாளர் இன்று அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஏராளமானோர் பிரித்தானியாவுக்கு வருவது சாத்தியமில்லை

முன்னர் சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கையைத் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய அரசு, தற்போது, சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.  

அது தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து பிரித்தானிய பிரதமரும் உள்துறைச் செயலரும் டிசம்பரில் அறிவுப்புகள் வெளியிட்டிருந்தார்கள்.

புலம்பெயர்தல் அமைப்பை தவறாக பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு வர முயல்வோரைக் கட்டுப்படுத்தும் விதிகள் மார்ச் மாத துவக்கம் முதல் நடைமுறைக்கு வர உள்ளன.

AP

ஆக, கடந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு சட்டப்படி புலம்பெயர்ந்தவர்கள் 300,000 பேர். இந்த ஆண்டு அத்தனை பேர் பிரித்தானியாவுக்கு வருவது சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது.  

என்னென்ன கட்டுப்பாடுகள்? 

மார்ச் மாதம் 11ஆம் திகதி முதல், முதியவர்கள், நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் பணி செய்வோர், தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல், திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் வருபவர்களுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, 26,200 பவுண்டுகளில் இருந்து 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.

ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல், குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு 29,000 பவுண்டுகளாக உயர உள்ளதுடன், அது படிப்படியாக அதிகரிக்கவும் உள்ளது.

மேலும், நாளை, அதாவது, ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல், உலகின் பிற பகுதிகளுடன் பிரித்தானியா எவ்வாறு வர்த்தகம் செய்கிறது என்பதிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையில், விசிட்டர் விசாவில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இதற்கிடையில், ஏற்கனவே, மாணவர் விசாக்களுக்கான மாற்றங்கள், ஜனவரி மாத துவக்கத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்டன. அதன்படி, முதுகலை ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்கள் அல்லது அரசின் நிதி உதவி மூலம் ஸ்காலர்ஷிப் பெறும் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்கள் மட்டுமே தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் வாழ பிரித்தானியாவுக்கு அழைத்துவரமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed