• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்த குரங்கம்மை தொற்று 

Jun 7, 2022

உலக நாடுகளில் குரங்கம்மை தொற்றின் பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மே 13 முதல் ஜூன் 2ம் திகதி வரையான காலகட்டத்தில் மொத்தம் 780 குரங்கம்மை தொற்று பாதிப்பு உலக நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், குரங்கம்மை தொற்றால் உலகளாவிய ஆபத்து நிலை மிதமானது என்றே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மட்டும் குரங்கம்மை தொற்றுக்கு 207 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் 156 பேர்களுக்கும் போர்த்துகல் நாட்டில் 138 பேர்களுக்கும் இதுவரை குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, பெரும்பாலான புதிய பாதிப்பு எண்ணிக்கை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலும், மெக்ஸிகோ, அர்ஜென்டினா, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் பதிவாகியுள்ளது.

இருப்பினும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் மிகவும் குறைவு என்றே சுகாதார நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், மேலதிக நாடுகளுக்கு குரங்கம்மை தொற்று பரவும் நிலை ஏற்பட்டால், தற்போதைய சூழல் ஆபத்தாக மாறவும் வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளனர்.

ஆப்பிரிக்காவுக்கு பின்னர் ஐரோப்பிய நாடுகள் குரங்கம்மை தொற்றுக்கு மையமாக உருமாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

போக்குவரத்து தடைகளை விலக்கியதாலையே தொற்று பரவல் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும், பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளை கட்டுப்படுத்தவும் ஐரோப்பா தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐரோப்பாவில் எதிர்வரும் மாதங்களில் டசின் கணக்கான விழாக்கள், கூடுகைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

தொற்று பாதித்தவர்களுடன் நெருங்கி பழகும் நபர்களுக்கு கண்டிப்பாக குரங்கம்மை பரவும் வாய்ப்புகள் அதிகம் எனவும், இதனால் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் சிக்கல் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, குரங்கம்மை தொற்றானது முதலில் நினைத்ததை விட நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ளது என்று சுகாதார அதிகாரிகளிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். 

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed