• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் தமிழ் கால்பந்து வீரர் கத்திக் குத்தில் பலி

Okt 16, 2022

கனடா ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உள்ளூர் நேரப்படி வெள்ளி – சனி நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டார்ஹாம் பொலீஸ் தெரிவித்துள்ளது.

ஒன்ராறியோ தமிழ் வட்டாரங்களின் தகவலின் படி உயிரிழந்தவர் அருண் விக்னேஸ்வரராஜா என அடையாளம்காணப்பட்டிருக்கிறார். இவர் ஒரு சிறந்த உதைபந்தாட்ட வீரர் என்றும்
தமிழ்த் தேசிய விளையாட்டு அணிகளில் துடிப்புடன் பங்குபற்றி வந்தவர் எனவும் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அஜாக்ஸ் (Ajax) என்ற இடத்தில் உள்ள கிங்ஸ்கஸ்ரில் அருந்தகத்துக்கு (King’s Castle Bar and Grill) வெளியே வாகனத் தரிப்பிடத்தில் இருவர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் என்றும் அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து அடுத்தவரைப் பலமாகத் தாக்கிவிட்டு காரில் ஏறித் தப்பிவிட்டார் என்றும் பொலீஸ் தகவல்கள் கூறுகின்றன.
கடுமையான வெட்டுக் காயங்களுடன் ரெறென்ரோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இளைஞர் அருண் விக்னேஸ்வரராஜா அங்கு பின்னர் உயிரிழந்தார். அவரை வெட்டிவிட்டுத் தப்பிச் சென்ற நபரைப் பொலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை.

கத்தி வெட்டுச் சம்பவம் இடம்பெற்ற அதேநேரத்தில் அருந்தகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் சாரதி ஒருவர் தனது காரை வேகமாகச் செலுத்தி நபர் ஒருவரை மோதிப்படுகாயப்படுத்தியுள்ளார். அவரைப் பொலீஸார் கைது செய்துள்ளனர். படுகாயங்களுக்கு உள்ளானவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இரு சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு ஏதும் உள்ளதா என்பது குறித்து அறிய விசாரணை நடத்தப்பட்டுவருவதாக டார்ஹாம் பிராந்தியப் பொலீஸ் தெரிவித்துள்ளது. சம்பவங்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அதனைத் தெரியப்படுத்துமாறு பொலீஸார் கேட்டுள்ளனர்

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed