• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு பிறக்கும் நேரம்

Apr 13, 2024

இலங்கையில் ,மங்களகரமாக குரோதி வருஷம் வாக்கிய பஞ்சாங்கப்படி பங்குனி 31ம் நாள் (13.04.2024) சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் குரோதி வருஷம் பிறக்கின்றது.

அன்றைய தினம் மாலை 4 மணி15 நிமிடம் முதல் நள்ளிரவு 12.15 வரையிலான காலம் விஷு புண்ணிய காலமாகும் .

யாழ்.சிறுப்பிட்டி மேற்கு ஞீ ஞானவைரவர் பெருமான் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024

வருடம் பிறக்கும் நேரம்

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம்: குரோதி தமிழ் வருஷ பிறப்பு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பங்குனி 31ம் நாள் (13/04/2024) சனிக்கிழமை இரவு 9.04 மணியளவில் குரோதி வருடம் ஆரம்பமாகின்றது.

மேலும் அன்றைய தினம் திருக்கணிதத்தின்படி விஷு புண்ணிய காலமாக பங்குனி 31ம் நாள் (13.04.2024) மாலை 5.04 மணி முதல் நள்ளிரவு 1.04 வரை விஷு புண்ணிய காலமாக திருக்கணிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரோதி வருஷத்தில் தோஷ நட்சத்திரங்களாக மிருகசீரிடம், திருவாதிரை புனர்பூசம் 1ம் 2ம் 3ம் பாதம் சித்திரை, விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை, அவிட்டம் இவற்றில் பிறந்தோர் தவறாது மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து நல்ல கருமங்களை செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மருத்துநீர் விஷுபுண்ணிய காலத்தில் அதாவது பங்குனி 31ஆம் நாள் (13.04.2024) மாலை 4.15 இல் இருந்து நள்ளிரவு 12.15 வரையான காலத்தில் விஷு புண்ணிய காலமான இந்நேரத்தில் மருத்துநீர் தேய்த்து சிரசில் புன்கிலையும் காலில் ஆலிலையும் வைத்து ஸ்நானம் செய்து தோஷ நிவர்த்தி பெறுவது நன்மையானதாகும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி விஷு புண்ணிய காலமாக பங்குனி 31ம் நாள் (13.04.2024) மாலை 5.04 முதல் பின் இரவு 1.04 வரையிலான காலம் விஷு புண்ணிய காலமாகும். இப்புண்ணிய காலத்தில் மருத்துநீர் வைத்து தலையில் ஆலிலையும் காலில் இலவம் இலையும் வைத்து ஸ்நானம் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

குரோதி வருஷ பிறப்பு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துயில் எழுந்து ஸ்நானம் செய்து நித்திய கருமங்களை முடித்து கண்ணாடி தீபம் பூரண கும்பம் முதலான மங்கல பொருட்களை தரிசித்து சூரியனுக்கு பொங்கல் பூஜை வழிபாடுகள் மேற்கொண்டு விருந்தினர்களை உபசரித்து சிரார்த்தம், தர்ப்பணம் செய்ய இருப்போர் அதனையும் நிறைவேற்றி, உறவினர் நண்பர்களுடன் முன்போல் போஜனம் மேற்கொண்டு சுகந்த சந்தன புஷ்பாதிகளை அணிந்து புது வருடத்தில் செயற்படுத்தக்கூடிய நற்கருமங்களை சிந்தித்து மங்களகரமாக வாழ்வோமாக.

ஆடைகள் 

அத்துடன் ஸ்நானம் செய்ததன் பின்னர் இஷ்ட தெய்வங்களை வழிபட்டு முதியோர் பெரியோர்களிடம் ஆசி பெற்று அறுசுவை பதார்த்தங்களையும் போஜனம் செய்வது சிறப்பானதாகும். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குரோதி வருடப்பிறப்பு புத்தாடை நிறமாக கபிலம், பட்டு போன்ற வெண்மையான பட்டாடை அல்லது வெள்ளை கரை கொண்ட புதிய பட்டாடை அணிவது சிறப்பானதாகும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரோதி வருஷ பிறப்பு புத்தாடையாக கருநீல நிற பட்டு அல்லது நீல கரை வைத்த புது வஸ்திரம் அணிவது சிறப்பானதாகும்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புத்தாடை ஆபரணமாக நீலக்கல் அல்லது வைரம் போன்ற ஆபரணம் அணிந்து கொள்வது சிறப்பானதாகும்.

அதேவேளையில் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி புதிய ஆபரணமாக இந்திர நீலம் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிவது சிறப்பானதாகும்.

புதுவருஷ கைவிஷேட நேரங்கள் 

புதுவருஷ கைவிஷேட  நேரங்கள் குரோதி வருஷ கைவிஷேட நேரங்களாக வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சித்திரை முதல் நாள் (14/04/2024) ஞாயிற்றுக்கிழமை பகல் 7.57 ல் இருந்து 9.56 வரையிலும் அதே நாள் 9.59 ல் இருந்து 12.01 வரையிலான நேரமும் அதே நாள் ஞாயிற்றுக்கிழமை பகல் மாலை 6.17 ல் இருந்து 8.17 வரையிலான காலமும் மறுநாள் சித்திரை இரண்டாம் நாள் திங்கட்கிழமை பகல் 9.08 ல் இருந்து 9.51 வரையிலான நேரமும் அதே நாள் திங்கட்கிழமை பகல் 9.55ல் இருந்து 10.30 வரையிலான காலமும் கை விஷேடத்திற்குரிய சுப நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு பிறக்கும் நேரம்: கைவிசேடம் பெற உகந்த நேரம் ! | Chitrai New Year Birth Time Special Timings

குரோதி வருஷம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கைவிஷேட நேரங்களாக சித்திரை 1ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பகல் 10.00 மணியில் இருந்து 11.15 வரையிலான நேரமும் அதேநாள் மாலை 6.30 இல் இருந்து 7.45 வரையிலான நேரமும் சித்திரை 2ம் நாள் திங்கட்கிழமை அதாவது (15.04.2024 )காலை 6.00 ல் இருந்து 7.25 வரையிலான நேரமும் அதே நாள் திங்கட்கிழமை பகல் 9.35 இல் இருந்து 10.35 வரையிலான நேரம் கைவிஷேட நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குரோதி வருஷம் வியாபாரம் செய்தல் புதுக்கணக்கு பதிதல் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சித்திரை 2ம் நாள் (15.04.2024) திங்கட்கிழமை பகல் 9.08 ல் இருந்து 9.51 வரையிலான நேரமும் அதே நாள் திங்கட்கிழமை பகல் 9.55 இல் இருந்து 10.30 வரையிலான நேரமும் சித்திரை 05 அதாவது (18.04.2024 )வியாழக்கிழமை பகல் 10.49 இல் இருந்து 11.50 வரையிலான நேரம் வியாபாரம் செய்வதற்கும் புதுக்கணக்கு பதிவதற்கும் சிறப்பானதாகும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி குரோதி வருஷப்பிறப்பின் வியாபாரம் புது கணக்குப்பதிதல் சித்திரை 2ம் நாள் (15.04.2024) திங்கட்கிழமை பகல் 10.00 ல் இருந்து 11.30 வரையிலான காலமும் சித்திரை 20ம் நாள் (03.05.2024) வெள்ளிக்கிழமை காலை 9.00 இல் இருந்து 10.15 வரையிலான காலமும் சித்திரை 23 (05.05.2024) திங்கட்கிழமை காலை 9.30 இல் இருந்து 10. 40 வரையிலான காலமுமம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வியாபாரம் புதுக்கணக்கு பதிவதற்கான சுப நேரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மலரும் குரோதி வருடம் எப்படி?

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த சனிக்கிழமை இரவு 8.10 மணிக்கு 13-04-2024 சுக்ல பட்சத்தில் சஷ்டி திதி, மிருகசீரிஷம் 4 ஆம் பாதத்தில் மிதுன ராசியில், விருச்சிக லக்னத்திலும், நவாம்சத்தில் கடக லக்னம், துலா ராசியிலும் சோபனம் நாமயோகம், கவுலவம் நாமகரணத்தில் சனி ஹோரையிலும், செவ்வாய் மகா தசையில் சுக்கிர புத்தி, புதன் அந்தரத்தில் இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.

குரோதி வருடத்திற்கான பலன்

குரோதி ஆண்டு சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஆண்டாகும். இயற்கை சீற்றம், கள்வர் பயம், எதிரிகளால் அதிக தொல்லை இருக்கக் கூடும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இவற்றைத் தவிர்க்கலாம். தேவையான நேரத்தில் மழைப் பொழிவு குறைவாக இருக்கும். காய்கறி பற்றாக்குறை காணப்படலாம், பயிர்களும் சுமாரான விளைச்சலைத் தரும் என்று இந்த வெண்பாவில் கூறப்பட்டுள்ளது.

இவ்வருஷத்துக்கு விந்திய மலையில் தென்மேற்கு திசையில் வாருண மேகம் உற்பத்தியாகிறது. பெய்யும் மழையில் 50 சதவீதம் கடலிலும், 30 சதவீதம் மலையிலும், 20 சதவீதம் பூமியிலும் பெய்யும்.

குரோதி தமிழ் ஆண்டில் உலகில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உடல் நலனிலும், பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எரிமலைச் சீற்றம், கடல் தொந்தளிப்பு, மலைப் பிரதேசங்களில் மண் சரிவு, தீ விபத்துகள், ரசாயனக் கழிவுகளால் அபாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாகிறது. அரசியல் கட்சியினருக்குள் குழப்பங்கள் ஏற்படும். மக்களிடையே ஒற்றுமை ஏற்படும். நாட்டில் விலைவாசி உயரும். காய் கனிகள் விலை உயரும். புதுவித நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதற்கு தகுந்தவாறு உரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். எல்லையில் போர் ஏற்படலாம்.

இந்தியா பல்வேறு வகையில் வளர்ச்சியை அடையும். இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளை உலகமே வியந்து பார்க்கும். நல்ல பலன் அளிக்கக்கூடிய வகையில் அவை இருப்பதால், நல்ல பாராட்டைப் பெறும். கரும்பு, மஞ்சள் விளைச்சல் அதிகரிக்கும். சிவப்புநிற பொருட்கள் விளைச்சல் அதிகமாகும். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகிறது. குற்றச் செயல்களையும், தீராத நோய்களையும் களையும் பொறுப்பில் அவர்கள் உள்ளனர்.

வாழ்க்கை சீராக அமைய குடும்ப பந்தம் அவசியம். குடும்பத்தில் ஒற்றுமை மிகவும் முக்கியம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, மனம் விட்டுப் பேசி அன்புடன் இருக்க வேண்டும். வீண் சந்தேகங்கள், வீண் விவாதங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பெற்றோர், பெரியவர்களை மதித்தல், மகான்களை வணங்குதல், குலதெய்வ வழிபாடு, பழைய கோயில் புதுப்பிப்பு, ஏழை, எளியோருக்கு உதவுதல் ஆகியவற்றை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

தங்கம், வெள்ளி, உலோகங்களின் விலை சில மாதங்களுக்கு குறையும். ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. முதலீட்டாளர்கள் அதிக லாபம் பெறுவார்கள், விவசாய நிலங்கள் வீடு கட்ட விற்கப்படும் அபாயம் உள்ளது. உணவு சாகுபடியில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட முன்வர வேண்டும். ஆக மொத்தம் இந்த ஆண்டு, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆண்டாகவும், பல வித அனுபவங்களைத் தரக் கூடிய ஆண்டாகவும் அமைகிறது.

லோகா சமஸ்து சுகினோ பவந்து (இந்த உலகில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்) என்று அடிக்கடி சொல்லி வரவும். இந்த வாசகம் நேர்மறை நோக்கங்களை, தன்னலமற்ற தன்மையை ஊக்குவிக்கிறது. உள் அமைதி, ஒற்றுமையை வளர்க்கிறது. மன அழுத்தம், பதற்றத்தை போக்குகிறது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed